Monday, August 11, 2008

கொமுரு கவிதைகள்

கேள்வியும் பதிலும்

கேள்விகள் மழைகால ஈசல் போல
சட்டையில் படுக்கையில் நீரில் காற்றில்
உடம்போடு ஒட்டி உதற முடியாமல்

பதிலை பிடித்து பொருத்திவிட்டால்
கேள்விகளை தொலைத்துவிடலாம்
பொருத்தியபோது கேள்விகள் தொலையவில்லை

பதில்கள் கேள்விகளை விட அதிகமானது
இத்தேடலில் தெரிந்தது தொலைந்தது
நான் மட்டுமே என்று.


வாழ்க்கை

கழித்த வருடங்கள் வீண் - நண்பன்
காசாகவில்லை - மனைவி
ஏழை பாவம் - சமுதாயம்

கடவுளும் காதலிகளும் இல்லாத வாழ்க்கை
உயிரில் உணர்வின் ஒரு சலிப்பு
கூடிய சுமையில் கூனான ஒரு முதுகு

துடிக்கும் இவ்விதயம் நிற்றலில்
வாய்க்கும் இன்னொருவனுக்கு
இவ்வாழ்க்கை !


விதைப்பு

விதைப்பதே எனது வேலை
பூப்பதை கணக்கிடுவதல்ல

ஈரமான வயல்களில் விதைத்தேன்
முளைத்திருக்கக்கூடும்

மரங்கள் அறியுமோ தான்
எத்தனை பூத்தோம் என்று

மண்ணும் விதையும் அறியும்
விதைத்தவன் அறிவானோ?

எங்கேயும் விதைக்கலாம்
விதைப்பவனுக்குத் தேவை
ஈரமான வயல்களே !

No comments: